ஐஸ் போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தப்படுவது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மொரட்டுமுல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுபெத்த பிரதேசத்தில் இன்று (17) காலை முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிடப்பட்டபோது, 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அங்குலானை பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, அவரது மனைவியிடமிருந்து மேலும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரின் மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவை, அங்குலானை புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த 31 மற்றும் 21 வயதுடைய தம்பதியினர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இருவரும் நீண்டகாலமாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், இதன்மூலம் கோடிக்கணக்கான பணம் ஈட்டியுள்ளதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இந்த இருவருக்கும் போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது, இந்த வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்ட பணம் மற்றும் அவர்களது வங்கிக் கணக்கு விபரங்கள் தொடர்பில் அவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top