(கனகராசா சரவணன்;)
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை பூலாக்காடு சீல்லிக்கொடி பகுதியில் உள்ள கழி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரிய வேதம் பூலாக்காடு கிரான் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான மூத்த தம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சம்பவ தினமான நேற்று செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள சீல்லிக்கொடி பகுதியில் உள்ள குழி ஒன்றில் மீன்பிடிப்பதற்காக சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை இதனையடுத்து அவரை உறவினர்கள் தேடி சென்ற போது அந்த பகுதியில் இன்று காலை யானை தாக்குதலில் பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .
இதனையடுத்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய சம்பவ இடத்துக்கு சென்ற கோறளைப்பற்று தீடிர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன், மற்றும் பொலிசார் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கும் படி பொலிசாருக்கு உத்தரவிட்டார்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாழைச்சேனையில் மீன்பிடிக்கச் சென்றவர் யானை தாக்குதலில் உயிரிழப்பு–



