கைது

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது!


இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளும் பெண் ஒருவரும் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டார்.

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

இஷாரா செவ்வந்தியுடன் ஜேகே பாய் உட்பட மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் கடந்த புதன்கிழமை (15) நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர்.

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றார்.

இஷாரா செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்த பெண் ஒருவர் வியாழக்கிழமை (16) கைதுசெய்யப்பட்டதுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (17) கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் மாமியார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top